பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபிரான்கி ஸபாடா என்பவர், தாம் உருவாக்கிய "ஃப்ளைபோர்ட்' மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
நீரில் அதிவேக படகுகளை இயக்கும் சாகச வீரரான ஃபிரான்கி ஸபாடா, நின்றபடியே பறந்து செல்வதற்கான "ஃப்ளைபோர்ட்' என்ற கருவியை உருவாக்கியுள்ளார். அந்தக் கருவி மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க 10 நாள்களுக்கு முன்னர் அவர் முயன்றார். எனினும், நடுவே படகு மூலம் அவரது கருவிக்கு கூடுதல் எரிபொருள் நிரப்பும் முயற்சி தோல்வியடைந்து, அவர் கடலில் விழுந்தார்.
இந்த நிலையில், கூடுதல் ஏற்பாடுகளுடன் ஞாயிற்றுக்கிழமை அவர் மீண்டும் மேற்கொண்ட முயற்சி வெற்றியடைந்து, அவர் ஆங்கிலக் கால்வாயை பறந்து கடந்தார். இதன் மூலம், "ஃப்ளைபோர்ட்' கருவி மூலம் அந்தக் கால்வாயைக் கடந்த முதல் நபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.