வளைகுடாவில் மேலும் ஒரு கப்பலை சிறைபிடித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிப்பதாவது:
வளைகுடாவில் பார்ஸி தீவு அருகே வெளிநாட்டுக் கப்பல் ஒன்றை ஈரான் சிறைப்பிடித்துள்ளது.
7 லட்சம் லிட்டர் எரிபொருளை சட்டவிரோதமாகக் கடத்திச் சென்றதாக அந்தக் கப்பல் சிறைப்பிடிக்கப்பட்டது.
புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 7 கப்பல் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பொருளாதாரத் தடை விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தடை செய்யப்பட்ட சிரியா நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றதாக ஈரான் எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் கடந்த மாதம் சிறைப்பிடித்தது. அதற்குப் பதிலடியாக, தங்களது மீன்பிடிக் கப்பலில் மோதியதாகக் கூறி பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை ஈரானும் சிறைப்பிடித்தது. இந்த நிலையில், மேலும் ஒரு கப்பலை ஈரான் சிறைப்பிடித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.