இஸ்லாமாபாத்: தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியது தொடர்பான வழக்கில் ஹபீஸ் சயீத் குற்றவாளி என்று பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இவரை சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்தது. அத்துடன் இவரைக் கைது செய்யும் பொருட்டு, அவரைப்பற்றிய தகவல்களை அளிப்போருக்கு சுமார் ரூ.70 கோடி பரிசு அளிக்கப்படும் எனவும் கூறியது. இருந்த போதிலும் அவரைக் கைது செய்ய பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது.
அதேநேரம் அவரைக் கைது செய்ய சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. இதையடுத்து ஹபீஸ் சயீத் மற்றும் அவரது லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா, மற்றும் பஹ்லாஹ் இ இன்சானியத் அறக்கட்டளை ஆகியவற்றின் மீது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கு நிதி திரட்டியதாக, பயங்கரவாத தடுப்பு படையினர் விசாரணையைத் துவக்கினார்.
அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பல இடங்களிலும் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் மீது மொத்தம் 23 வழக்குகளை கடந்த 3-ந் தேதி பயங்கரவாத தடுப்பு படையினர் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளின் காரணமாக லாகூரில் இருந்து குஜ்ரன்வாலா நகருக்கு வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காகச் சென்று கொண்டிருந்த ஹபீஸ் சயீத் அதிரடியாக கைது செயய்யப்பட்டார்.
இந்நிலையில் தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியது தொடர்பான வழக்கில் ஹபீஸ் சயீத் குற்றவாளி என்று பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன் வழக்கும் குஜராத் (பாகிஸ்தான்) பகுதிக்கு மாற்றப்பட்டது என்று பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.