அமெரிக்கா-தலிபான் இடையிலான தோஹா பேச்சுவார்த்தை நிறைவு

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை குறைத்துக் கொள்வது தொடர்பான சமீபத்திய பேச்சுவார்த்தையின் சுற்றுகள் நிறைவடைந்துவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 


ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை குறைத்துக் கொள்வது தொடர்பான சமீபத்திய பேச்சுவார்த்தையின் சுற்றுகள் நிறைவடைந்துவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தவும், அமெரிக்க படைகளை அங்கிருந்து  குறைத்துக் கொள்ளவும் அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையிலான பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வந்தது. மொத்தம் எட்டு சுற்றுகள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லாஹ் முஜாகித் திங்கள்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்கா-தலிபான்கள் இடையிலான பேச்சுவார்த்தை கடினமானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. இந்த பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்ல   இருதரப்பிலிருந்தும் அந்தந்த தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று அந்த சுட்டுரைப் பதிவில் முஜாகித் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது தொடர்பாக எந்த அறிக்கையும் உடனடியாக வெளியிடவில்லை.
இதனிடையே நல்லெண்ண நடவடிக்கையாக நன்னடத்தை அடிப்படையில் 35 தலிபான் கைதிகளை விடுதலை செய்வதாக ஆப்கன் அரசு திங்கள்கிழமை அறிவித்தது. போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டும் நோக்கிலேயே ஆப்கன் அரசு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. 
நியூயார்க்  இரட்டை கோபுரத்தை அல்-காய்தா பயங்கரவாதிகள் கடந்த 2001-ஆம் ஆண்டு தகர்த்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது.
அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்டு வந்த தலிபான்கள், அல்-காய்தாவுக்கு புகலிடம் அளித்து வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 18 ஆண்டுகளாக அமெரிக்க ஆதரவுடன் அமைக்கப்பட்ட அரசுப் படைகள் மீதும், அமெரிக்கர்கள் மீதும் தலிபான்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில், ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை முழுமையாக திரும்பப் பெற முடிவு செய்துள்ள அமெரிக்கா, அதற்கு முன்னதாக அல்-காய்தா ஆதரவை கைவிடவும், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தலிபான்கள் சம்மதிக்க வேண்டும் என விரும்புகிறது.
இதற்காக, தோஹா நகரில் அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையே தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com