பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஏப்ரல் மாதம் தீவிபத்துக்குள்ளான 850 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாட்டர்டாம் தேவாலயம் முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கலாசாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தீவிபத்துக்குப் பிறகு, அண்மையில் வீசிய அனல் காற்று காரணமாக நாட்டர்டாம் தேவாலயத்தின் மேலும் சில கல்கள் விழுந்துவிட்டன.
இதன் காரணமாக, அந்த தேவாலயம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அங்கு சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த அமைச்சகம் தெரிவித்தது.
பாரீஸ் நகரில் அமைந்துள்ள, புகழ்பெற்ற நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென தீப்பிடித்தது.
அதன் காரணமாக, 12-ஆவது நூற்றாண்டில் மரச் சட்டங்களை பெருமளவில் பயன்படுத்திக் கட்டப்பட்ட அந்த தேவாலய மேற்கூரையின் பெரும் பகுதி எரிந்து நாசமானது.
மேலும், அந்தத் தேவாலயத்துக்கு கம்பீரத்தை அளித்து வந்த புகழ்பெற்ற கூம்பு வடிவ கோபுரம் இடிந்து விழுந்தது.
அத்துடன், தேவாலயத்தின் உள்பகுதி, மேற்சுவர், ஜன்னல்கள் மற்றும் ஏராளமான கலைப் படைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்தன.
தேவாலயக் கட்டமைப்பில் பெருமளவு ஈயம் பயன்படுத்தப்பட்டிருந்ததால், தீவிபத்து காரணமாக ஏற்பட்டுள்ள ஈய மாசுபாட்டை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, அந்தப் பணிகள் முடியும்வரை சீரமைப்புப் பணிகள் நிறுத்தப்படுவதாக கடந்த மாதம் 25-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கலாசாரத் துறை அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.