பாலிவுட் நடிகையை ஐநா கவுரவ பதவியில் இருந்து நீக்குமாறு யுனிசெப்புக்கு பாகிஸ்தான் பெண் அமைச்சர் கடிதம்
இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து பிரபல பாலிவுட் நடிகையை ஐநா அமைப்பின் கவுரவ பதவியில் இருந்து நீக்குமாறு ஐநாவின் யுனிசெப் அமைப்புக்கு, பாகிஸ்தான் பெண் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
ஐக்கிய நாடுங்கள் சபையின் ஓர் அங்கமாக உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் நலனுக்காக 'யுனிசெப்' அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பிற்கான நல்லெண்ணத் தூதராக பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா செயல்பட்டு வருகிறார். காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து அவர் சமீபத்தில்கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரியங்கா சோப்ராவை யுனிசெப்பின் நல்லெண்ணத் தூதர் பதவியில் இருந்து நீக்குமாறு, யுனிசெப் அமைப்அமைப்பின் செயல் இயக்குநருக்கு, பாகிஸ்தான் பெண் அமைச்சர் ஷிரீன் மஸாரி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக யுனிசெப் அமைப்பின் இயக்குநர் ஹென்ரீட்டா போருக்கு, பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சரான ஷிரீன் மஸாரி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
போருக்கு அதுவும் ஓர் அணு ஆயுத போருக்கு ஆதரவு தெரிவித்து பேசுவது என்பது அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பதவியின் மதிப்பை குறைக்கும் விதமாக அமைந்துள்ளது.அவர் உடனடியாக அந்தப் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படாவிட்டால், சமாதானத்திற்கான நல்லெண்ணத் தூதர் என்னும் ஐநாவின் சிந்தனையே சர்வதேச சமூகத்தின் முன்னால் கேலிக்கூத்தாக மாறி விடும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.