லண்டன் இந்தியாவிற்கு நாடு கடத்தக் கோரும் வழக்கில், பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் வியாழனன்று ஆஜராக உள்ளார்.
இந்தியாவிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்த நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹூல் சோக்ஸி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டனர். இவர்களில் நீரவ் மோடி, லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நீரவ் மோடியை கைது செய்து ஒப்படைக்கும்படி ஸ்காட்லாந்து யார்டு போலீஸாருக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது, இதையேற்று, லண்டனில் நீரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கைது செய்தனர். அன்று முதல் லண்டனிலுள்ள வாண்ட்ஸ் ஒர்த் சிறையில் நீரவ் மோடி அடைக்கப்பட்டுள்ளார்.
தனக்கு ஜாமீன் கேட்டு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனுதாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் நான்கு முறை மறுப்பு தெரிவித்தது. அப்போது நீரவ் மோடிக்கு ஜாமீன் அளித்தால், மீண்டும் சரணடையாமல் போகலாம் என்று லண்டன் நீதிமன்றம் தெரிவித்தது.
நான்கு முறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் நீரவ் மோடி ஜூன் மாதம் 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரது போலீஸ் காவலை ஜுலை 25-ஆம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையும் ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர் நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் ஆக.22 ஆம் தேதி நீடிக்கப்பட்டு, அப்போது வரை அவரை சிறையில் அடைக்க லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவிற்கு நாடு கடத்தக் கோரும் வழக்கில், பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் வியாழனன்று ஆஜராக உள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜராகும் நீரவ் மோடியிடம் அடுத்தடுத்த விசாரணை குறித்த தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.