ஹாங்காங்கிலுள்ள பிரிட்டன் துணைத் தூதரக அதிகாரியை தங்களது அதிகாரிகள் கைது செய்துள்ளதாக வெளியான தகவலை சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் புதன்கிழமை கூறியதாவது:
ஹாங்காங்கிலுள்ள பிரிட்டன் துணைத் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் சீனாவின் ஷென்ஷென் போலீஸாரால் கைது செய்யப்பட்டது உண்மைதான்.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக அவர் 15 நாள் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
அந்த நபர் பிரிட்டன் தூதரகத்தில் பணியாற்றினாலும், அவர் ஹாங்காங் குடியுரிமை பெற்றவர் ஆவார். இதன் மூலம் அவர் சீனக் குடிமகன் ஆவார். எனவே, அவர் கைது செய்யப்பட்டுள்ளது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம் ஆகும் என்று கெங் ஷுவாங் விளக்கமளித்தார்.
முன்னதாக, ஹாங்காங்கிலுள்ள பிரிட்டன் துணைத் தூதரகத்தில் பணியாற்றி வரும் சைமன் செங் என்ற அதிகாரி, அந்த நகரையொட்டிய சீன நகரமான ஷின்ஷெனில் நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக பயணம் செய்ததாகவும், அங்கு அவரை சீன அதிகாரிகள் கைது செய்ததாகவும் ஹாங்காங்கின் ஹெச்கே01 செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நகரில் 2 மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய போராட்டங்கள், அந்த மசோதா காலாவதியான பிறகும் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
இந்தப் போராட்டங்களை பிரிட்டன் தூண்டிவிடுவதாக ஏற்கெனவே பல முறை சீனா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தச் சூழலில், பிரிட்டன் துணைத் தூதரக அதிகாரியை சீனா கைது செய்துள்ளது இரு நாடுகளிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.