லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமத் மீது முட்டை வீச்சு சம்பவம் நடந்துள்ளது
பாகிஸ்தான் ரயில்வே அமைச்சராக இருப்பவர் ஷேக் ரஷீத் அஹமத். இவர் அவாமி முஸ்லீம் லீக் என்னும் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இவர் சமீபத்தில் இங்கிலாந்து சென்றிருந்தார். கடந்த செவ்வாயன்று அவர் நிகழ்வு முடிந்து அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்த சமயம்,இருவர் அவரை வழிமறித்து தங்கள் கையில் வைத்திருந்த முட்டைகளை அவர் மீது வீசியதுடன், அவரது முகத்தில் தாக்கியுள்ளனர். உடனே அவர்கள் சம்பவ இடத்தை விட்டு ஓடிச் சென்று விட்டனர்.
ஆனால் புதன்கிழமையன்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் லண்டன் பிரிவைச் சேர்ந்த ஆசிப் அலி கான் மற்றும் சமா நாஸ் இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் தங்களது கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோவை தொடர்ந்து தரக்குறைவாக விமர்சித்து வருவதால், ஷேக் ரஷீத் அஹமத் மீது தாங்கள் இருவரும் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிப்பது குறித்து, ஷேக் ரஷீத் அஹமதிடம் ஆலோசனை நடத்தி விட்டு முடிவு செய்யப்படும் என்று அவாமி முஸ்லீம் லீக் கட்சியின் லண்டன் பிரிவுத் தலைவர் சலீம் ஷேக் தெரிவித்துள்ளார்.