மியான்மரிலிருந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கயா அகதிகள், தாயகம் திரும்புவதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவர்களை திரும்ப அழைப்பதற்கு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வங்கதேச முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹிங்கயா அகதிகளைத் திரும்ப அழைக்கும் புதிய முயற்சியாக, 5 பேருந்துகள் மற்றும் 10 லாரிகளை அந்த நாட்டின் டெக்னாஃப் நகரிலுள்ள முகாமுக்கு அதிகாரிகள் அனுப்பினர்.
எனினும், மியான்மர் திரும்புவதற்கு அந்த முகாமிலுள்ள அகதிகள் யாரும் முன்வராததால், அந்த வாகனங்கள் காலியாகத் திரும்பின.
எனினும், வெள்ளிக்கிழமை (ஆக. 23) மீண்டும் அந்த வாகனங்கள் முகாமுக்குக் கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரோஹிங்கயா தலைவர் நோசிமா கூறியதாவது:
மியான்மர் அரசுப் படையினர் எங்கள் இனத்தவர்களை கொன்று குவித்தனர். எங்கள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த நிலையில், மியான்மர் திரும்பிச் செல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
எங்களுக்கு மியான்மரில் முழுமையான குடியுரிமையும், பாதுகாப்பு உத்தரவாதமும் அந்த நாட்டு அரசு அளித்தால் மட்டுமே நாங்கள் அந்த நாட்டுக்குத் திரும்புவோம் என்றார் அவர்.
மியான்மரில் போலீஸார் மீது ரோஹிங்கயா விடுதலைப் படையினர் கடந்த 2017-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தினர்.
அதையடுத்து ராணுவம் மேற்கொண்ட பதிலடி நடவடிக்கையில் ஏராளமான ரோஹிங்கயா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டதாகவும், பாலியல் வன்முறைக்குள்ளானதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
அதையடுத்து, ராணுவம் மற்றும் உள்ளூர் இனவாத அமைப்புகளின் வன்முறைக்கு அஞ்சி, 7.4 லட்சம் பேர் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.