இஸ்லாமாபாத்: இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையில் பறக்க முழுமையாகத் தடை விதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 370–ஐ ரத்து செய்ததுடன், காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாகப் பாகிஸ்தான் இந்தியா மீது அதிருப்தியில் இருப்பதுடன், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்கும் முனைப்பில் இருக்கிறது.
இந்நிலையில் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையில் பறக்க அந்நாட்டால் முழுமையாகத் தடை விதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து இந்தியா - ஆப்கானிஸ்தான் வர்த்தக பரிமாற்றத்திற்கான சாலை வழிப்போக்கு வரத்தையும் பாகிஸ்தான் தடை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடைபெற்ற பாகிஸ்தான் அமைச்சரவை கூட்டத்தில் இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டதாகப் பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் ஹூசைன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.