அமெரிக்காவின் ஹவாய் அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க ராணுவத் தளமான பேர்ல் துறைமுகத்தில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய விமானப்படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதௌரியா கலந்து கொண்டதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மாநாடு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருந்து விமானத் தலைவர்களை ஒன்றிணைந்து, அவர்கள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்கள் மற்றும் பரஸ்பர நலன்களைப் பற்றிய அடுத்தகட்ட நடவடிக்கை, பிராந்திய பாதுகாப்பு, பல்துறை விழிப்புணர்வு மற்றும் எச்ஏடிஆர் போன்றவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
மேலும், விமானப்படைகளுக்கு இடையில் தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் மேம்பட்ட தொடர்புக்கு வழி வகுப்பதும், இந்த மாநாட்டின் நோக்கமாக உள்ளது. இதில், அமெரிக்காவைத் தவிர, 20 நாடுகளைச் சேர்ந்த விமானப்படைத் தளபதிகள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, அமெரிக்க கடற்படை மாலுமி, புதன்கிழமை மதியம் சுமார் 2:30 மணியளவில் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர், மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், பேர்ல் துறைமுகத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றிருந்த இந்திய விமானப்படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதௌரியா உட்பட இந்திய விமானப்படை அதிகாரிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.