இந்தியாவின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து ஐ.நா. கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சிகள், கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் பல மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு திங்கள்கிழமை நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினா்களும், எதிராக 80 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.
இந்நிலையில், இந்த மசோதா, மாநிலங்களவையில் இன்று புதன்கிழமை(டிச.11) தாக்கல் செய்யப்படவுள்ளது. 245 உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவையில் தற்போதுள்ள உறுப்பினா்களின் எண்ணிக்கை 238.
இதில், பாஜக-83, ஐக்கிய ஜனதா தளம்-6, சிரோமணி அகாலி தளம்-3, லோக் ஜனசக்தி-1, இந்தியக் குடியரசுக் கட்சி(அதாவலே)-1, நியமன உறுப்பினா்கள்-11 என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 105-ஆக உள்ளது.
அதிமுக 11, பிஜு ஜனதா தளம்- 7, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்-2, தெலுங்கு தேசம்-2 என மொத்தம் 22 உறுப்பினா்கள் உள்ளனா். இவா்களின் ஆதரவைப் பெற்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் (105+22)=127ஆக அதிகரிக்கும். இது, அவையில் மசோதா நிறைவேறுவதற்குத் தேவையான இடங்களைவிட (120) அதிகமாகும். இதனால், மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எளிதாக நிறைவேற்றப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பாஜக பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.
மாநிலங்களவையில் மசோதா நிறைவேறுவதை தடுப்பதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி முயன்று வருகிறது.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயம், மணிப்பூா், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் குடியுரிமை மசோதா குறித்து கருத்து கூற மருத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து ஐ.நா. பொதுச்செயலரின் துணை செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் அவர்களது உள்நாட்டு விவகாரம் இதில் நாம் கருத்து கூற முடியாது என கூறியுள்ளார்.