ஆர்ஜென்டீனாவில் விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விலைவாசியைக் கட்டுப்படுத்தும் வகையில் உணவுப் பொருள் அவசர நிலையை அரசு அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ஜென்டீனா அதிபராக மெளரிசியோ மேக்ரி கடந்த 2015-ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து விலைவாசி அதிக அளவில் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அவரது ஆட்சியில் மின் கட்டணங்கள் 2.1 சதவீதமும், எரிபொருள்களின் விலை 3 சதவீதமும் உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே இருந்த அரசுகள் மிக அதிக அளவில் அளித்து வந்த மானியங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் பொருள்களின் விலைகள் உயர்ந்ததாக அரசு கூறி வந்தது.
இந்த நிலையில், கடந்த நிதியாண்டில் ஆர்ஜென்டீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அதையடுத்து, சர்வதேச நிதியத்திடமிருந்து 5,600 கோடி டாலர் (சுமார் ரூ.3,98,400 கோடி) கடனுதவி பெற வேண்டிய நிலைக்கு அந்த நாடு தள்ளப்பட்டது.
மேலும், பண மதிப்பு வீழ்ச்சியடைந்து, பண வீக்கம் 47.6 சதவீதம் ஆனது.
இந்தச் சூழலில், உயரும் விலைவாசிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. நாடு முழுவதும் சுமார் 50 நகரங்களில் ஆர்பாட்ட ஊர்வலங்கள் நடைபெற்றன.
இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு அதிபர் மெளரிசியோ மேக்ரியின் ஆட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ஜென்டீனாவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இத்தகைய போராட்டங்கள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.