மொஸாம்பிக் நாட்டின் முன்னாள் அதிபர் அர்மான்டோ குயுபுசாவின் மகன் என்டபி குயுபுசா ஊழல் வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது: மொஸாம்பிக்கின் முன்னாள் அதிபர் அர்மான்டோ குயுபுசாவின் நான்கு வாரிசுகளில் மூத்தவரான என்டபி குயுபுசா தலைநகர் மபூட்டோவில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.
அரசு கடன் மோசடியில் ஈடுபட்டு நாட்டின் நிதி நிலைமையை நெருக்கடிக்கு தள்ளியதில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுவரையில் இந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு பேரில் முன்னாள் அதிபரின் மகனும் ஒருவர் என்று அந்த ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலதிபர், புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட கடன் மோசடியில் ஈடுபட்ட 7 பேரை மொஸாம்பிக் அதிகாரிகள் இந்த வாரத்தில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
மொஸாம்பிக் அதிபராக அர்மான்டோ குயுபுசா 10 ஆண்டுகள் பதவி வகித்தார். அவர் பதவியிலிருந்து விலகிய பின்பு கடந்த 2016-இல் இந்த கடன் மோசடி விவகாரம் வெளி உலகுக்கு தெரியவந்தது.
அர்மான்டோ அதிபர் பதவியில் இருந்தபோது, மீன்பிடி படகு மற்றும் ரோந்து கப்பல்கள் வாங்குவதற்காக அரசு பணம் 2 பில்லியன் டாலர் கடன் கொடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது.
ஆனால், நாடாளுமன்றத்திடம் இந்த பரிமாற்றம் தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டது.
பின்னர், தணிக்கை அதிகாரிகள் கணக்குகளை முறையாக சரிபார்த்தபோது பணம் உரிய நோக்கத்துக்கு செலவிடப்படாமல் வேறு நோக்கங்களுக்காக திருப்பி விடப்பட்டது தெரியவந்தது.