புரட்சிகர பாதுகாப்புப் படை வீரர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தான் தூதரை சம்மன் அனுப்பி வரவழைத்து ஈரான் வலியுறுத்தியுள்ளது.
ஈரானில் அண்மையில் புரட்சிகர பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 27 வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளும், அந்நாட்டு உளவுத் துறையும் ஆதரவளிப்பதாக ஈரான் குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில், டெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பி ஈரான் நேரில் வரவழைத்தது. அப்போது அவரிடம், புரட்சிகர பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை கண்டுபிடித்து, அவர்களை கைது செய்ய பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த விவகாரத்துக்கு பாகிஸ்தான் அரசும், ராணுவமும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்றும், ஈரான் எல்லையில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் ஈரான் எதிர்பார்க்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.