ஈரான் ராணுவம் மீது கடந்த வாரம் தற்கொலை தாக்குதல் நடத்தி 27 பேரை கொலை செய்தது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஷனாலியில் பேருந்து ஒன்றில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் கடந்த புதன்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்தை குறிவைத்து வெடிப்பொருள் நிரப்பிய கார் மூலம் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 27 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு நடைபெற்ற பகுதி, பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ளது.
இந்நிலையில், அந்த தற்கொலைத் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிதான் என்பதையும், அவரது பெயர் ஹஃபீஸ் முகமது அலி என்பதையும் ஈரான் ராணுவம் உறுதி செய்துள்ளது. தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சன்னி இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த ஜெய்ஷ்-அல்-ஆதீல் அமைப்பின் பயங்கரவாதி இத்தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு உதவியாக இருந்த மற்றொருவர் தேடப்பட்டு வருகிறார். இந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் அடைக்கலம் கொடுத்து வருகிறது என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
ஈரானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களை எதிரியாகக் கருதும் பாகிஸ்தானைச் சேர்ந்த சன்னி பிரிவு பயங்கரவாதிகள் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்.