சவூதி அரேபியாவுக்கு அணு ஆயுதங்களை தயாரிக்க உதவுக் கூடிய தொழில்நுட்பங்களை வழங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சிப்பதாகக் கூறப்படுவது குறித்து நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
அமெரிக்காவைச் சேர்ந்த தனது ஆதரவு நிறுவனங்கள் லாபம் பார்ப்பதற்காக, சர்ச்சைக்குரிய அணு சக்தி தொழில்நுட்பங்களை சவூதி அரேபியாவுக்கு விற்பனை செய்யும் முயற்சியில் டிரம்ப் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து ஜனநாயகக் கட்சி தலைமையிலான, மேற்பார்வை மற்றும் சீர்திருத்தங்களுக்கான பிரதிநிதிகள் சபைக் குழு கடந்த மாதம் முதல் விசாரணை நடத்தி வருகிறது.
அந்த விசாரணையின் ஒரு பகுதியாக, டிரம்ப்பின் மருமகனும், அவரது முதுநிலை ஆலோசகருமான ஜாரெட் குஷ்னருக்கும், சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் இடையே நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்த
ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு வெள்ளை மாளிகைக்கு நாடாளுமன்றக் குழுவின் தலைவர் எலிஜா கமிங்க்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
அந்தக் குழு தாக்கல் செய்துள்ள முதல் கட்ட அறிக்கையில், தனியார் நிறுவனங்களின் ஆதாயத்துக்காக அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவக் கூடிய சர்ச்சைக்குரிய தொழில்நுட்பங்களை சவூதி அரேபியாவுக்கு வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் அணு மின் நிலையம் அமைப்பதற்காக முன்மொழியப்பட்ட நிறுவனத்தின் ஆலோசகராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மைக்கேல் ஃபிளைன் பணியாற்றியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சிறிது காலம் பதவி வகித்த மைக்கேல் ஃபிளைன், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷியா தலையீடு செய்த விவகாரத்தில் தவறான தகவலை அளித்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு, அதற்கான தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
சவூதி அரேபியாவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கு முன்மொழியப்பட்ட மற்றொரு தொழிலதிபர், டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்த தாமஸ் பராக் எனவும் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.