நடப்பாண்டில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளதால் அதற்கு உரிய தீர்வை விரைவில் காண ஐ.நா. உதவ வேண்டும் என வட கொரியா கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:
அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, சோயாபீன் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் உற்பத்தி நடப்பாண்டில் 14 லட்சம் டன் அளவுக்கு குறையும் என வடகொரியா மதிப்பிட்டுள்ளது. இதனால், அங்கு உணவுப் பொருளுக்கு மிகவும் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த பற்றாக்குறையைப் போக்க சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியை வட கொரிய அரசு நாடியுள்ளது. இது தொடர்பாக வடகொரியா அரசுடன் ஐ.நா. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. எனவே, அங்குள்ள நிலைமையை உணர்ந்து தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
தற்போதைய நிலையில், ஐ.நா. புள்ளிவிவரப்படி, வட கொரியாவின் மொத்த மக்கள்தொகையில் 41 சதவீதம் பேருக்கு, அதாவது 1.05 கோடி பேருக்கு, உணவுப் பொருள்களுக்கான உதவிகள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.