புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தானியருக்கு தொடர்பிருப்பதற்கான நம்பகமான ஆதாரத்தை இந்தியா அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புல்வாமா தாக்குதலால் இந்தியா மிகப்பெரும் வேதனையடைந்திருப்பதாகவும், ஆதலால் பயங்கரவாதிகளை தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானியருக்கு தொடர்பிருப்பது குறித்த நம்பகமான ஆதாரத்தை இந்தியா அளித்தால், பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இதை நிச்சயம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செய்வார். இதற்கு பிரதமர் மோடி, அமைதியை ஒரு வாய்ப்பாக அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 19ஆம் தேதியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதே வாக்குறுதியை அளித்திருந்தார். அப்போது இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், "பாகிஸ்தானில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பும், அதன் தலைவர் மசூத் அஸாரும் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதுவே பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதற்கு போதும். இந்தியா ஆதாரம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். இது வெறும் சாக்கு போக்கு ஆகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.