இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான எல்லைப்பகுதியில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக பாகிஸ்தானில் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரின் பால்கோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை செவ்வாயன்று தாக்குதல் நடத்தியது. அதற்கு எதிர்வினையாக புதனன்று இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள், காஷ்மீரின் ரஜோரி பகுதியில் இந்திய ராணுவ முகாம் அருகே குண்டுகளை வீசியிருக்கின்றன. இதன்காரணமாக இருநாடுகளிடையே போர்ப்பதற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவுடனான எல்லைப்பகுதியில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக பாகிஸ்தானில் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்துக்கு ஆணையத் தகவல்களை மேற்கோள் காட்டி 'டான்' செய்தித் தளத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் பின்வருமாறு:
பாகிஸ்தானின் லாகூர், முல்தான், கராச்சி, பைசலாபாத், சியால்கோட் மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய விமான நிலையங்களில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பெஷாவரில் உள்ள பச்சா கான் சர்வதேச விமான நிலையமானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கிருந்து ராணுவ விமானங்கள் செயல்படுமென்று தெரிகிறது.
பாகிஸ்தான் முழுவதும் உச்ச கட்ட 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.