இஸ்லாமாபாத்: சமாதான பேச்சுவார்தைக்கு வருமாறு இந்திய பிரதமர் மோடிக்கு தொலைபேசி வழியாக அழைப்பு விடுக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் தயாராக இருப்பதாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்முத் குரேஷி தெரிவித்துள்ளார்.
புதன்கிழமையன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படை விமானங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் மாயமானார்.
இந்த சண்டையில் இந்திய விமானப் படையின் மிக் ரக விமானத்தை துரதிருஷ்டவசமாக இழந்துள்ளோம் என்றும், அதில் இருந்த விமானி மாயமானதாகவும் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் புதன் காலை உறுதி செய்தார்.
அதேசமயம் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான் தங்கள் வசம் இருப்பாக தெரிவித்த பாகிஸ்தான், இது தொடர்பான சில விடியோக்களையும் நேற்று வெளியிட்டது. ஆனால் முதலில் இதனை இந்திய வெளியுறவுத் துறை உறுதி செய்யவில்லை. விசாரணை நடப்பதாக மட்டும் கூறி இருந்தது.
ஆனால் அதன் பின்னர் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு இந்திய வெளியுறவுத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் சமாதான பேச்சுவார்தைக்கு வருமாறு இந்திய பிரதமர் மோடிக்கு தொலைபேசி வழியாக அழைப்பு விடுக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் தயாராக இருப்பதாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்முத் குரேஷி தெரிவித்துள்ளார்.
வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.