பிரான்ஸிலுள்ள பேக்கரி ஒன்றில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்; 47 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் மையப் பகுதியில், பேக்கரி ஒன்று அமைந்துள்ள கட்டடத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்குப் பிறகு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
அந்த வெடி விபத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள கட்டடங்களிலும் நன்கு உணரப்பட்டது. வெடி விபத்து நேரிட்டபோது அந்தப் பகுதி சாலையில் ஏராளமானோர் இருந்தனர்.
விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கட்டடத்தில் இருந்தவர்களை உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தினர். எனினும், விபத்து காரணமாக மின்தூக்கி சேதமடைந்துவிட்டதால் மக்கள் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டது. முதலில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் தீயணைப்புத் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்தக் கட்டடத்தில் அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டபோதுதான் வெடிவிபத்து நேரிட்டது.
எரிவாயு வெடித்துச் சிதறியபோது கட்டடத்துக்குள் இருந்த தீயணைப்பு வீரர்களில் இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 47 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.