ஜகார்தா: கடந்த ஆண்டு கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ல்ஆம் தேதியயன்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட 'லயன் ஏர்' நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நடுவழியில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 189 பேரும் பலியாகினர்.
சேதமடைந்த விமானத்தின் பாகங்களை மீட்கும் பணி பெரிய அளவில் நடைபெற்று வந்தது. பணி துவங்கிய சில நாட்களில் விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒரு கருப்பு பெட்டி மீட்கப்பட்டது.
தற்போது இத்தனை நீண்ட தேடலுக்குப் பிறகு இரண்டாவது கருப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆழ் கடலின் 8 மீட்டர் ஆழமான சேற்றில் புதைந்திருந்த கருப்பு பெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானத்தின் முதன்மையான பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. என்று தேடுதல் குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.