ஈரான் ராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் திடீரென விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கிர்கிஸ்தானின் பிஸ்கெக் என்ற இடத்திலிருந்து இறைச்சியை ஏற்றிக் கொண்டு வந்த ராணுவ விமானம் ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே விழுந்து நொறுங்கியது. இதில், அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 15 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு விமானப் பொறியாளர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
விபத்துக்குள்ளான விமானம் போயிங் கார்கோ 707 வகையைச் சேர்ந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஃபாத் விமான நிலையத்தில் அந்த விமானம் திங்கள்கிழமை காலை தரையிறங்க முற்பட்டது.
அப்போது, மோசமான வானிலையால், விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி முள்வேலி மீது மோதி தீப்பிடித்து அருகில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது. இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை ஆராய்ந்த பிறகே விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள்தெரிவித்தனர்.