வடக்கு கரோலினா: ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். எனவே அதனைச் சிறப்பிக்கும் விதமாக ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவிக்க வேண்டும் என அங்குள்ள தமிழ்ச்சங்கம் மாகாண ஆளுநருக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக மாநில ஆளுநராக உள்ள ராய் கூப்பர் தமிழ்ச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, நடப்பு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்தார்.
இதற்கான அரசாணையை வெளியிட்டு அவர் கூறியதாவது:
தமிழர்களின் அடையாளம் தமிழ் மொழி. உலகில் நெடுங்காலமாக பேசப்பட்டும் எழுதப்பட்டும் வரும் சிறப்பைக் கொண்ட மொழிகளுள் ஒன்று தமிழ். வடக்கு கரோலினா மாநிலத்தின் வளர்ச்சியில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர். அவர்கள் தமது சிறப்பு மிக்க தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் இங்கு பாதுகாத்து வளர்த்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.