வெனிசூலாவில் அதிபர் நிக்கோலஸ் மடூரோவை கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரி, போலீஸார் காவலில் உயிரிழந்தது அந்த நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவின் ஆட்சியைக் கவிழ்க்கவும், அவரை படுகொலை செய்யவும் மேற்கொள்ளப்பட்ட சதி முறியடிக்கப்பட்டதாக அந்த நாட்டு அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடற்படை அதிகாரி ரஃபேல் அகோஸ்டாவை (படம்) போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், காவலில் இருந்த அகோஸ்டா சனிக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அகோஸ்டா சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அப்போது அவரது உடல்களில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டதாகவும் அவரது மனைவியும், வழக்குரைஞரும் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம், வெனிசூலாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகோஸ்டாவின் மரணம் குறித்து சர்வதேச தீர்ப்பாயத்திடம் முறையிடவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ உறுதியளித்தார்.
மேலும், நிக்கோலஸ் மடூரோ ஆட்சிக்கு எதிரான தங்களது போராட்டத்தில் இணையும்படி பாதுகாப்புப் படையினருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து வெனிசூலா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அகோஸ்டாவின் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மடூரோ ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதித் திட்டத்தில் அகோஸ்டாவும் ஓர் அங்கமாக இருந்தார் என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.