அமெரிக்காவில் அதிகனமழை: வெள்ளை மாளிகை வரை வெள்ளப்பெருக்கு
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் திங்கள்கிழமை பெய்த பலத்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
மேலும் கனமழை காரணமாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வெள்ள நீர் வெளியேறும் வரை சாலைப் போக்குவரத்துப் பயன்பாட்டை தவிர்க்குமாறு போலீஸார் எச்சரித்துள்ளனர். பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் தரைத்தளத்தில் அமைந்துள்ள பத்திரிகையாளர் மன்றம் வரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதுபோன்று கனமழை ஏற்படும் சமயங்களில் நீர் கசிவு காரணமாக அடிக்கடி இவ்வாறு நடைபெறும் என வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்படுகிறது.
2 நாட்கள் கழித்து மீண்டும் மற்றொரு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த திடீர் கனமழை காரணமாக வீடுகள், கார்கள் என பெரியளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.