பாகிஸ்தானில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
போல் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் முரீத் அப்பாஸ். இவர் கராச்சியில் உள்ள கயபான்ஏபுகாரி பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவருக்கும் இன்னொரு நபருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. அப்போது அப்பாஸ் மீது அந்த நபர் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அப்பாஸும், அவரது நண்பரும் தோட்டா பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அவரை துப்பாக்கியால் சுட்ட நபர், வீட்டுக்கு சென்று துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இருப்பினும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், அந்த நபரை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை முடிந்து குணமடைந்ததும் அவரைக் கைது செய்ய பாகிஸ்தான் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.