கடந்த 1989-ஆம் ஆண்டில் கடலுக்குள் மூழ்கிய சோவியத் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணுக் கதிர்வீச்சு வெளியேறுவதாக நார்வே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தற்போதைய நிலையில் அந்தக் கதிர்வீச்சின் அளவு குறைவாக உள்ளதால் அந்த வழியாகச் செல்லும் மீன்களுக்கோ, மனிதர்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த ஆய்வை மேற்கொண்ட நார்வே கடல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:
நார்வே கடல் பகுதியில் மூழ்கியுள்ள, சோவியத் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் உதிரி பாகங்கள், காற்று வெளியேறும் பகுதி ஆகியவற்றை சேகரித்து ஆய்வு மேற்கொண்டதில், அதிலிருந்து அணுக் கதிர்வீச்சு வெளியேறுவது கண்டறியப்பட்டுள்ளது.
நார்வே கடல் நீரில் சீசியத்தின் அளவு மிகக் குறைவு என்பதாலும், அந்த நீர்மூழ்கிக் கப்பல் மிக ஆழத்தில் இருப்பதாலும் அந்தக் கதிர்வீச்சின் சக்தி மிக வேகமாக கரைந்துவிடுகிறது.
எனவே, தற்போதைய நிலையில் அங்கு கதிர்வீச்சின் அளவு அபாயகரமானதாக இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
முன்னாள் சோவியத் யூனியனுக்குச் சொந்தமான கே-278 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தீவிபத்து காரணமாக கடந்த 1989-ஆம் ஆண்டு நார்வே கடலுக்குள் மூழ்கியது. அதிலிருந்த 69 பேரில் 42 பேர் உயிரிழந்தனர். அந்தக் கப்பலை இயக்கி வந்த அணு உலையும், இரு அணுகுண்டுகளும் அதிலிருந்து நீக்கப்படவில்லை.