ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியின்போது 13 வயது சிறுவன் நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
அந்த நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஃபைஸ் முகமது பாபர்கில் கூறியதாவது: நங்கர்ஹார் மாகாணத்தின் பசிர்வா அக்ஹாம் மாவட்டத்தில், அரசு ஆதரவுப் படை உள்ளூர் தளபதி மாலிக் தூர் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த 13 வயது சிறுவன், தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், மாலிக் தூர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தனர் என்றார் அவர். மாலிக் தூரைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. நங்கர்ஹார் மாகாணத்தில் தலிபான், இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) ஆகிய இரு பயங்கரவாத அமைப்புகளுக்குமே செல்வாக்கு உள்ளதால், அந்த இரு அமைப்புகளில் ஒன்று இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.