காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வெள்ளம் மற்றும் அதனால் உண்டான நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஒருபுறம் என்றால், மறுபுறம் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை நிலவரப்படி நேபாளத்தில் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்து உள்ளனர். மேலும் 24 பேரை காணவில்லை என அந்நாட்டுக் காவல்துறையினர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.