அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி, ரஷியாவிலிருந்து எஸ்-400 ஏவுகணை தளவாட பாகங்களை துருக்கி சனிக்கிழமையும் பெற்றது.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவுகளில், எஸ்-400 ஏவுகணை தளவாட பாகங்களை ஏற்றிக்கொண்டு, தலைநகர் அங்காராவிலுள்ள முர்டேட் விமான தளத்தில் தரையிறங்கிய ரஷிய சரக்கு விமானத்தின் படம், அந்த விமானத்திலிருந்து தளவாட பாகங்கள் இறக்கப்படும் படங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இதற்கிடையே, பொருளாதாரத் தடையையும் மீறி ரஷியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைத் தளவாடங்களை துருக்கி பெறத் தொடங்கியிருப்பது குறித்து, துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹுலுசி ஆகாருடன், அமெரிக்க பாதுகாப்புத் துறை இடைக்கால அமைச்சர் மார்க் எஸ்பர் தொலைபேசியில் விவாதித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அந்த தொலைபேசி உரையாடல் குறித்த விவரங்களை வெளியிட அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதுகுறித்து துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ரஷியாவிடமிருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை தளவாடங்களை வாங்குவது, துருக்கியின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமானது' என்று மார்க் எஸ்பரிடம் அமைச்சர் ஹுலுசி ஆகார் எடுத்துரைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனின் அங்கமாக இருந்து வந்த கிரீமியா தீபகற்பத்தை ரஷியா தன்னுடன் கடந்த 2014-ஆம் ஆண்டில் இணைத்துக் கொண்ட விவகாரத்தில், ரஷிய ராணுவ தளவாட ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை விதித்துத்துள்ளது.
எனினும், எதிரிகளின் ஏவுகணைகளையும், விமானங்களையும் வானில் இடைமறித்து தாக்கி அழிக்கவல்ல எஸ்-400 ஏவுகணை தளவாடங்களை ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை அந்த நாட்டுடன் துருக்கி கடந்த ஆண்டு மேற்கொண்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, அந்த ஒப்பந்தத்தைக் கைவிடாவிட்டால், துருக்கிக்கு அதிநவீன எஃப்-35 விமானங்களை விற்பனை செய்வதற்காக தாங்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தச் சூழலில், எஸ்-400 ஏவுகணை தளவாடங்களின் பாகங்கள் வெள்ளிக்கிழமை முதல் துருக்கி வரத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.