ஊழல் வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபரின் காவல் நீட்டிப்பு
ஊழல் வழக்கில் கைதான பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரியின் காவலை, மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்து, அந்நாட்டின் ஊழல் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் பேநசீர் பூட்டோவின் கணவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவருமான ஜர்தாரி, போலி வங்கிக் கணக்குகள் மூலம் சுமார் ரூ.15 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனைகள் மேற்கொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் காவலில் இருந்து வந்த அவரை, லண்டனில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் ஊழல் தடுப்பு அமைப்பினர் கடந்த 1-ஆம் தேதி கைது செய்தனர்.
இஸ்லாமாபாதில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், நீதிபதி முகமது பஷீர் முன் ஜர்தாரி திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ஊழல் தடுப்பு அமைப்பினர் விடுத்த கோரிக்கையை நீதிபதி ஏற்றுக் கொண்டார். ஆசிஃப் அலி ஜர்தாரி, பாகிஸ்தானின் 11-ஆவது அதிபராக கடந்த 2008 முதல் 2013 வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.