தலிபான் பயங்கரவாதிகளின் தொடர் மிரட்டலைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் கஜினி நகரில் இயங்கி வந்த சமா வானொலி நிலையம் மூடப்பட்டது.
இதுகுறித்து அந்த வானொலி நிலையத்தின் இயக்குநர் ரமீஸ் ஆஸிமி கூறியதாவது: எங்களது வானொலி நிலையத்தில் பணியாற்றும் 16 பேரில் 3 பேர் பெண்கள்.
இதனை தலிபான் பயங்கரவாதிகள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.
மேலும், தொலைபேசி மூலமும், கடிதங்கள் வாயிலாகவும் உள்ளூர் தலிபான் தலைவர் எனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து வானொலி நிலையத்தை மூட முடிவு செய்தோம் என்றார் அவர்.
எனினும், கஜினி வானொலி நிலையத்துக்கு தாங்கள் மிரட்டல் விடுக்கவில்லை என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஹாஜித் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் கஜினி வானொலி நிலையம் மூடப்படுவது இது 3-ஆவது முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன.