நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 90 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் பாய்ந்தோடும் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடந்த ஒருவாரமாக பெய்து வரும் கன மழையால் 25 மாவட்டங்களிலுள்ள 10,385 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 90 பேர் உயரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.
இதுதவிர மேலும் 29 பேரைக் காணவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட 3,366 பேரை ராணுவத்தினரும், காவல்துறையினரும் மீட்டனர். மீட்புப் பணிகளில் 27,380 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலேரியா, டெங்கு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மேலும் மழை பெய்யும் என வெள்ள முன்னறிவிப்புப் பிரிவு தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வெள்ள பாதிப்பு பகுதிகளில் நோய்கள் பரவுவதை தடுப்பதற்காகவும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு மருத்துவ உதவிகளை செய்வதற்காகவும் சர்வதேச அமைப்புகளிடம் நேபாள அரசு நிதியுதவி கோரியது. இதையடுத்து உதவ முன்வருவதாக சர்வதேச அமைப்புகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.