நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் வெள்ளிக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து காரணமாக அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. காலை 10 மணியளவில் தெற்கு தீவுப்பகுதியில் உள்ள நார்த்வுட் எனுமிடத்தில் உள்ள வீடு ஒன்று வெடித்துச் சிதறி தரைமட்டமானது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சிறப்பு கமாண்டோ படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள சூழலில் முக்கிய காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
காயம் காரணமாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடி விபத்து ஏற்பட்டபோது நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று உணர்ந்ததாகவும், குண்டுவெடிப்பு எதுவும் நடந்திருக்குமோ என அஞ்சியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, இதே கிறைஸ்ட்சர்ச் பகுதியில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.