காபூல்: ஆப்கானிஸ்தானில் வியாழனன்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 15 பேர் உடல் சிதறி பலியாகினர்.
ஆப்கானிஸ்தானின் பெட்ரோலியம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகத்தின் ஊழியர்கள் சிலர் தலைநகர் காபூலின் கிழக்கு பகுதியில் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன், வெடிகுண்டுகள் நிரப்பிய மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்து, அதன் மீது மோதி வெடிக்க செய்தான். இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. கரும்புகை மண்டலம் உருவானது.
குண்டுவெடிப்பில் குறிப்பிட்ட பேருந்து உருக்குலைந்து போனது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அங்கு அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின. இந்த தொடர் குண்டுவெடிப்பில் 15 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் 40–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை குண்டுவெடிப்புகளுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.