பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜிநாமா செய்வதையடுத்து, காலியாகும் அந்தப் பதவிக்கு போட்டியிடும் ஆளும் கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் ஊடகங்கள் தெரிவிப்பதாவது:
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் (பிரெக்ஸிட்) இழுபறி நீடித்து வருவதன் எதிரொலியாக, தனது பதவியை அடுத்த மாதம் 7-ஆம் தேதி ராஜிநாமா செய்வதாக பிரதமர் தெரசா மே கடந்த வாரம் அறிவித்தார்.
இந்த நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு இதுவரை 11 எம்.பி.க்கள் முன் வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் கொறடாவான மார்க் ஹார்ப்பரும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடவிருப்பதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
அதையடுத்து, அந்தப் பதவிக்கு போட்டியிடும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் போட்டியில், பிரெக்ஸிட்டுக்கு ஆதரவான பிரசாரத்தை முன்னின்று நடத்திய வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் போரிஸ் ஜான்ஸன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறப்படுகிறது.