லில்லி: வடக்கு பிரான்ஸின் சாலையோரம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்திய நபரின் பாக்கெட்டில் இருந்த சிகரெட் லைட்டர் மூலம் கொலையாளியை கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர் கொலையில், பெல்ஜியத்தைச் சேர்ந்த மற்றொரு இந்தியர்தான் கொலையாளி என்பதைக் கண்டுபிடிக்க அந்த ஒரே ஒரு சிகரெட் லைட்டர்தான் உதவியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாலையோரம் இருந்த கழிவுகளை அகற்றிக் கொண்டிருந்த போது அங்கே அழுகிய நிலையில் இருந்த இந்தியரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது ஆடையில் வேறு எந்த ஆவணங்களோ, செல்போனோ இல்லாத நிலையில், ஷர்ட் பாக்கெட்டில் இருந்து சிகரெட் லைட்டர் மட்டுமே ஒரே ஒரு தடயமாக சிக்கியது.
உயிரிழந்தவரின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ பரிசோதனைகளும், கைரேகையும் உதவவில்லை. ஒரே ஒரு தடயமான சிகரெட் லைட்டரில் "Kroeg Cafe" என்று எழுதப்பட்டிருந்தது. அதை வைத்துத்தான் விசாரணையே தொடங்கியது.
விசாரணையில் அந்த லைட்டர் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் உள்ள பப்களில் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது. பெல்ஜியம் காவல்துறைக்கு லைட்டரின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில், பெல்ஜியத்தில் இருந்த ஒரு பப்புக்கு அருகே வாழ்ந்து வந்த இந்தியரான 42 வயது தர்ஷன் சிங் கடந்த ஜூன் மாதம் முதல் மாயமானது தெரிய வந்தது.
அவரது டூத் பிரஷ்ஷில் இருந்த டிஎன்ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், இறந்தவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இவரைக் கொன்றதாக மற்றொரு இந்தியரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.