சவூதி அரேபிய விமான நிலையத்தில் யேமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியப் பெண் உள்பட 26 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து சவூதி கூட்டுப் படை செய்தித் தொடர்பாளர் துருக்கி அல்-மாலிக்கி கூறியதாவது:
சவூதி அரேபியாவின் அபா நகர விமான நிலையத்தில் யேமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி புதன்கிழமை தாக்குதல் நடத்தினர்.
இதில், இந்தியப் பெண் உள்பட 26 பேர் காயமடைந்தனர்; அவர்களில் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காயமடைந்த 18 பேர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர் என்றார் அவர்.
முன்னதாக, அபா நகர விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அபா நகரில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
மலைப்பகுதியில் அமைந்துள்ள அபா நகரம், கோடைகால சுற்றுலாத் தலமாகும்.
யேமன் உள்நாட்டுச் சண்டையில், அரசுப் படைகளுக்கு ஆதரவாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபியா கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதற்குப் பதிலடியாக, சவூதி அரேபியா மீது யேமன் கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அத்தகைய தாக்குதல்களை கடந்த ஒரு வாரமாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது சவூதி சுற்றுலாத் தல விமான நிலையத்தில் அவர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.