நாடுகடத்தும் சட்ட வரைவுக்கு எதிர்ப்பு: ஹாங்காங்கில் போலீஸாருடன் போராட்டக்காரர்கள் மோதல்

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை
போலீஸார் வீசிய கண்ணீர் புகைக் குண்டை எடுத்து, அவர்களை நோக்கி திருப்பி வீசும் போராட்டக்காரர்கள்.
போலீஸார் வீசிய கண்ணீர் புகைக் குண்டை எடுத்து, அவர்களை நோக்கி திருப்பி வீசும் போராட்டக்காரர்கள்.


ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை வெளிநாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான புதிய வரைவுச் சட்டத்தை அந்த நகர அரசு உருவாக்கியுள்ளது.
அந்தச் சட்டத்தின்படி, ஹாங்காங்குடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளாத பகுதிகளுக்குக் கூட கைதிகளை நாடுகடத்த முடியும். இதன் மூலம், ஹாங்காங்கில் கைது செய்யப்படுபவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடுகடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதற்கு ஜனநாயக ஆதரவாளர்களும், மனித உரிமை அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஹாங்காங்கின் முக்கிய நீதி அமைப்புகளான சட்டச் சங்கம், வழக்குரைஞர்கள் மன்றம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
புதிய சட்டத்தை எதிர்த்து ஹாங்காங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டின் ஜனநாயக ஆதரவுப் போராட்டத்துக்குப் பிறகு, ஹாங்காங்கில் நடைபெற்ற மிகப் பெரிய போராட்டமாக அது இருந்தது.
எனினும், புதிய நாடுகடத்தும் சட்ட வரைவை சட்டப் பேரவையில் புதன்கிழமை முன்வைக்கப் போவதாக ஹாங்காங் அரசின் தலைவர் கேரீ லாம் செவ்வாய்க்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், புதன்கிழமை 3 மணிக்குள் புதிய சட்டத்தைக் கைவிடும் முடிவை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கெடு விதித்தனர்.
எனினும், கெடு முடிவடைந்த பிறகும் அரசிடமிருந்து அவ்வாறு அறிவிப்பு வெளியாகாததையடுத்து, சட்டப் பேரவைக்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயன்றனர்.
அவர்களை போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கலைத்தனர். மேலும், போராட்டக்காரர்களை நோக்கி போலீஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.
இதற்கிடையே, நகரின் முக்கியச் சாலைகளில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடையை ஏற்படுத்தியதால் அந்தப் பகுதிகள் ஸ்தம்பித்தன.
இந்தச் சூழலில், புதிய சட்ட வரைவை சட்டப் பேரவையில் முன்வைக்கும் திட்டம் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com