அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சந்திரசேகர் சங்கரா. இவர் தனது குடும்பத்தாருடன் அயோவா மாகாணத்தில் வசித்து வந்தார்.
அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் சனிக்கிழமை காலை அவரது வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது, சந்திரசேகர், அவரது மனைவி லாவண்யா சங்கரா, இரண்டு மகன்கள் உள்பட நான்கு பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
அவர்களது உடல்களில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்தன. இதையடுத்து, அவர்கள் அனைவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.