இந்தோனேசியாவில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்தோனேசியாவின் பாந்தா கடற்பகுதியில் இருக்கும் அம்போன் தீவில் பூமிக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் திங்கள்கிழமை நேரிட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளியாக இந்நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
முன்னதாக, பாபுவா மாகாணத்திலுளள அபிபுரா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் நேரிட்ட சில மணி நேரங்கள் இடைவெளியில் அம்போன் தீவில் இந்நிலநடுக்கம் நேரிட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தின் காரணமாக, அம்போன் தீவில் உள்ள கட்டடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேபோல், நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது சேதம் ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை.
கடந்த வாரமும் இதே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது.
பூமிக்கடியில் டெக்டானிக் பிளேட்டுகள் அமைந்துள்ள பசிபிக் ரிங் ஆப் ஃபயர் பகுதியில் இந்தோனேசியா நாடு உள்ளது. இதனால் அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்படுகின்றன.
கடந்த 2018ஆம் ஆண்டில் சுலேவேசி தீவில் உள்ள பலு பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியை சுனாமி அலைகள் தாக்கின. இந்த இயற்கை சீற்றத்தில் சுமார் 2,200 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2004ஆம் ஆண்டில் ஆசக் மாகாணத்தில் 9.1 ரிக்டர் அளவில் பூகம்பம் தாக்கியது. இதையடுத்து கடலில் மிகப்பெரிய சுனாமி அலைகள் உருவாகி, இந்தோனேசியாவை தாக்கின. இதில் சுமார் 1,70,000 பேர் மரணித்தனர்.