வங்கதேசத்தில் விரைவு ரயில் ஒன்று திங்கள்கிழமை தடம்புரண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர். 67 பேர் காயமடைந்தனர்.
மௌல்விபாசர் மாவட்டத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. சயில்கட்டில் இருந்து இயக்கப்பட்ட உபாபன் விரைவு ரயில், மௌல்விபாசர் மாவட்டம் பாரம்சலில் வந்தபோது, அதிலிருந்த 2 பெட்டிகள் தடம்புரண்டன. 2 பெட்டிகளில் ஒன்று, தண்டவாளம் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இன்னொரு பெட்டி, தண்டவாளம் பகுதியில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த பயங்கர விபத்தில் ரயிலில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். 67 பயணிகள் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 20 பேரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, சயில்கட் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்த தகவலின்பேரில், ரயில்வே குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கு வங்கதேச ரயில்வே அமைச்சகம் 2 குழுக்களை அமைத்துள்ளது. அக்குழுவிடம் அடுத்த 3 நாள்களில் விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.