ஹாங்காங்: அரசு அலுவலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகை

ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டக்காரர்கள், அரசு அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டடத்தை திங்கள்கிழமை சுமார் 2 மணி நேரம்


ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டக்காரர்கள், அரசு அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டடத்தை திங்கள்கிழமை சுமார் 2 மணி நேரம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஹாங்காங்கின் வான் சாய் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் ரெவென்யூ டவர் என்ற அந்த கட்டடத்தின் நுழைவு வாயில் மற்றும் வரவேற்புப் பகுதியை சுமார் 100 போராட்டக்காரர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். 
மேலும், ஜப்பானின் ஒசாகா நகரில் இந்த வாரம் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வரும் உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்போவதாக பிரதான போராட்டக்காரர்கள் குழு ஒன்று திட்டமிட்டுள்ளது. 
ஹாங்காங்கின் சட்ட அதிகாரத்தை பலவீனப்படுத்தும் சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை, ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வரும் தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று நம்புகிறோம் என்று ஹாங்காங்கின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 
அனுமதிக்க மாட்டோம்: இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் ஹாங்காங் விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதிக்க மாட்டோம் என்று சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஜாங் ஜுன் கூறியுள்ளார். 
நியாயம், சமூக நீதியை பாதுகாக்கவும், சட்ட அமைப்பில் இருக்கும் குறைபாடுகளை போக்கவும் ஹாங்காங் அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
அந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் தேவையான ஒன்று. அதற்கு சீன மத்திய அரசு ஆதரவளிக்கிறது. ஜி-20 மாநாட்டில் ஹாங்காங் விவகாரம் குறித்து விவாதிக்கப்படாது; அதை அனுமதிக்க மாட்டோம் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com