கம்போடியாவில் 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 28 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 சீனர்கள் உள்பட 7 பேர் மீது அந்த நாட்டு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கம்போடியாவின் சிஹானோக்வில் நகரில் சனிக்கிழமை நேரிட்ட அடுக்குமாடி கட்டட விபத்து தொடர்பாக, சீனாவைச் சேர்ந்த அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் செங் குன் மீது அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக சீனாவைச் சேர்ந்த கட்ட ஒப்பந்ததாரர், கட்டுமான மேலாளர், பொறியாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த விபத்து தொடர்பாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள சீன நாட்டவர் ஒருவரும், வியத்நாம் மற்றும் கம்போடியாவைச் சேர்ந்த இருவரும் தலைமறைவாக உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்போடியாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிஹானோக்வில் நகரில் சீனா பெருமளவில் முதலீடு செய்து தொழில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. எனினும், சனிக்கிழமை நேரிட்ட இந்த கட்டட விபத்தைத் தொடர்ந்து, சீன நிறுவனங்கள் பாதுகாப்பை அலட்சியம் செய்வதாக பொதுமக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், 5 சீனர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.