கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகடிஷு நகரில் நீதிபதி இல்லம் அருகே குண்டு வெடித்ததில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர்.
அல்-காய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
மேலும், நாங்கள் குறிவைத்தது மாகா அல்முகராமா ஹோட்டல்தான் என்றும் நீதிபதி இல்லம் இல்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தலைமை நீதிபதி அப்ஷிர் ஒமர் இல்லம் நோக்கி கார் ஒன்று வந்தது. நீதிபதி இல்லத்துக்கு வெளியே இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் காரை முன்னேறிச் செல்ல விடாமல் தடுத்தனர். எனினும், வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது, காரில் நிரப்பி கொண்டு வரப்பட்டிருந்த வெடிப்பொருள்கள் வெடித்துச் சிதறின. இதில், 11 பேர் உயிரிழந்துவிட்டனர். 35 பேர் காயமடைனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீதிபதியை குறிவைத்தே இந்தத் தாக்குதலை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர்.
வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறிய சில நிமிடங்களில் 4 பயங்கரவாதிகள் அருகில் இருந்த கட்டடங்கள், வர்த்தக வளாகங்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அப்போது, பாதுகாப்புப் படையினர் அவர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் சிலர் காயமடைந்தனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபரில் மொகடிஷு நகரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 500 பேர் உயிரிழந்தனர். சோமாலிய வரலாற்றிலேயே அழியாத தழும்பாக அந்தத் தாக்குதல் பதிவானது.