அமைதிக்கான நோபல் பரிசுக்கு நான் தகுதியானவன் அல்ல என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரன் கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து, அவர் கூறியபடி இந்திய விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இது இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வந்த பதற்றமான சூழலை தணித்தது.
இந்த சம்பவத்தை அடுத்து, இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று அந்நாட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் கோரிக்கையை எழுப்பினர். இந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் பயங்கரமாக டிரெண்டிங் ஆனது. அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இணையதளம் மூலம் ஞாயிற்றுக்கிழமை வரை 3 லட்சம் பேர் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையே, இம்ரான் கானுக்கு நோபல் பரிசு வழங்க கோரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், நோபல் பரிசு குறித்தான கருத்துக்கு இம்ரான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது,
"நோபல் பரிசுக்கு நான் தகுதியானவன் இல்லை. காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு கண்டு, அங்கு அமைதி நிலவ யார் வழி வகுக்குகிறாரோ அவரே நோபல் பரிசுக்கு தகுதியானவர்" என்றார்.