ஓட்டாவா: எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து, பல்வேறு நாடுகள் போயிங் விமானங்களுக்கு தடை விதித்து வரும் நிலையில், கனடாவும் தங்களது வான் எல்லையில் போயிங் விமானங்கள் பறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பயணிகள் விமானம் (போயிங்-737 மேக்ஸ் 8) ஞாயிற்றுக்கிழமை தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 4 இந்தியர்கள் உள்ளிட்ட 157 பேரும் உயிரிழந்தனர். அதன் எதிரொலியாக, அந்த ரக விமானங்களை வர்த்தகப் பயன்பாட்டில் இருந்து நிறுத்துவதாக சீனா, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, பிரிட்டன், சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகள் தடை விதித்தன.
இதனைத் தொடர்ந்து, பிரேஸில், ஆஸ்திரேலியா, ஆர்ஜெண்டீனா, நார்வே, வியட்நாம், நியூசிலாந்து, தென்கொரியா, மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளின் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் போயிங் 737 மேக்ஸ் 8 விமானப் பயன்பாட்டை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், கனடாவும் போயிங் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. இதுகுறித்து கனடாவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் மார்க் கர்னோவ் கூறுகையில், பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வணிக ரீதியிலான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ மற்றும் ‘போயிங் 737 மேக்ஸ் 9’ விமானங்கள் கனடாவில் இருந்து புறப்படவோ, கனடாவுக்கு வரவோ அல்லது கனடா வான் எல்லையில் பறக்கவோ தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.